சென்னையில் இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர், தி.நகர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தை சேர்ந்த நரேஷ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதாக சொல்லப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரராக இவர் இருந்து வருகிறார்.
சட்ட விரோத பண பரிவர்த்தனை முறைகேடு புகார்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. தேர்தல் முடியும் வரை சென்னையில் மேலும் பல இடங்களிலும் இந்த சோதனை விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது. தேர்தலில் இந்தியா கூட்டணியை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு ஏவி விட்டுள்ளதாக இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே, கடந்த வாரம் பல்வேறு ஒப்பந்தரார்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.