புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சேகர் ரெட்டி, ஓபிஎஸ் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். சேகர் ரெட்டியுடன் சேர்ந்து காவிரி மணல் குவாரிகளை எடுத்து வியாபாரம் செய்து வந்தார். அப்போது விதிகளுக்கு புறம்பாக மணல் அள்ளியதாக இவர் மீது புகார்கள் வந்தது. இதனால் இவர்கள் மணல் மாபியா என்று அழைக்கப்பட்டனர்.
இவரது அலுவலகம் புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ளது. வீடு அறந்தாங்கி சாலையில் உள்ள முத்துப்பட்டினம் என்ற இடத்தில் உள்ளது. மேற்கண்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் இரு
இடங்களிலும் சோதனை நடக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் 4, 5 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோல திண்டுக்கல்லில் உள்ள ராமச்சந்திரனின் நண்பர்கள் ரத்தினம், கோவிந்தன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடக்கிறது. திருச்சி சென்னை, வேலூர், விழுப்புரம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. சென்னை அண்ணாநகர் ஆடிட்டர் சண்முகராஜ் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.