உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்க விசா மற்றும் குடியுரிமைக்காகக் கனவு கண்டு வரும் தற்காலத்தில், தாய்நாட்டின் மீதான பற்றால் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி ஒருவர் தனது அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த மகாலட்சுமம்மா என்ற இந்த மூதாட்டி, தனது வாழ்நாளின் இறுதிச் சடங்குகள் சொந்த ஊரிலேயே நடைபெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மீண்டும் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளார்.
மகாலட்சுமம்மா கடந்த 2000-ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்குள்ள தனது குடும்பத்தினருடன் நீண்ட காலம் வசித்து வந்தார். அமெரிக்காவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வாழ்க்கை அமைந்திருந்த போதிலும், வயது முதிர்வின் காரணமாகத் தனது சொந்த மண்ணின் மீதான ஏக்கம் அவருக்கு அதிகரித்தது. இதன் காரணமாக, தனது வாழ்நாளின் இறுதி காலத்தைச் சொந்த ஊரிலேயே நிம்மதியாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்த 2018-ஆம் ஆண்டிலேயே அவர் இந்தியா திரும்பினார்.
தற்போது 94 வயதை எட்டியுள்ள மகாலட்சுமம்மா, தான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணிலேயே தனது இறுதி மூச்சு பிரிய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதுமட்டுமன்றி, தனது மறைவுக்குப் பின் செய்யப்பட வேண்டிய இறுதிச் சடங்குகள் அனைத்தும் முறைப்படி தனது சொந்த ஊரிலேயே நடைபெற வேண்டும் என்பதற்காக, தற்போதைய அமெரிக்கக் குடியுரிமையை அவர் முழுமையாகத் துறந்துள்ளார். மீண்டும் ஒரு இந்தியக் குடிமகளாக மாறுவதற்காக அதிகாரப்பூர்வமாக அவர் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளார்.
