தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் – திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் சோதனைச்சாவடியில்

அதிகாரிகள் வழக்கம்போல் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது காரில் திண்டுக்கல்லுக்கு வந்தார்.
கரூர் – திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, கல்வார்பட்டி சோதனை சாவடியில் தேர்தல் நிலைய கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர்
அதனைத் தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் துணை முதலமைச்சரின் வாகனத்தையும், அவருடன் வந்த மற்றொரு வாகனத்தையும் முழுமையாக சோதனை செய்தனர். சோதனை முடிந்த பின்னர், எந்த விதமான குற்றச்சாட்டுகளும் பதிவாகாத நிலையில், உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
