ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குட்டியுடன் காட்டு யானை சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இதன் வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதும், வாகனங்களை வழிமறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் காட்டு யானை வெளியேறியது. பின்னர் அவை ஆசனூர் அருகே அரேப்பாளையம் பிரிவு பகுதியில் ரோட்டோரம் உள்ள வனப்பகுதிக்கு வந்தன. யானைகளை பார்த்ததும் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அச்சமடைந்தனர்.
வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். போக்குவரத்து பாதிப்பு அப்போது காட்டு யானை ஒரு
லாரியின் அருகே சென்று லாரியின் மீது கரும்புத்துண்டு ஏதாவது உள்ளதா என தனது துதிக்கையால் தேடிப் பார்த்தது. ஆனால் லாரியில் ஏதும் சிக்கவில்லை. பின்னர் சிறிது நேரம் வாகனங்களை வழிமறித்த யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. அதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அங்கு மீண்டும் ஒரு காட்டு யானை வந்தது. அது ரோட்டில் அங்கும் இங்கும் நடமாடிவிட்டு சென்றுவிட்டது. இதனால் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் எச்சரிக்கை இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் கூறும்போது, ‘பகல் நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே யானைகள் சாலையில் நடமாடும் போது அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை உபயோகிக்க வேண்டாம். மேலும் யானையின் அருகே சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும்’ என்றனர்