SCRIPT
தமிழகத்தை வடிகால் மாநிலமாக நினைக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நூதன போராட்டம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததாலும் ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துப் போனது. காவிரி நீர் கேட்டு விவசாயிகள் தொடர் கோரிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்தனர். மேலும், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு காவிரியில் உரிய தண்ணீரை திறக்காமல் மௌனம் சாதித்து வந்தது.
தற்போது கர்நாடகப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதன் தொடர்ச்சியாகவே கர்நாடக அரசு தற்போது காவிரியில் தண்ணீரை திறந்து விட்டுள்ளது.
இதைக் கண்டித்து, தமிழகத்தை வடிகால் மாநிலமாக எண்ணி கர்நாடக அரசு செயல்படுவதாகவும், மேகதாது அணை கட்டுவதைத் தீவிரமாக எதிர்க்கும் வகையிலும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி, ஆற்று மணலில் உடலை புதைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நூதான போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
