நாகை மாவட்டம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவநேச செல்வம், காளத்தி நாதன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் படகின் உரிமையாளர் பாலகுமார் தலைமறைவாகியுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டபாணி , உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு மீனவர்கள் நடுகடலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகை மாவட்ட மீனவ கிராமங்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலை சம்பவத்தை கண்டித்து பைபர் படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.உயிரிழந்த மீனவர்களுக்கு நீதிகேட்டும், பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இழுவைமடி வலை மீன்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கீழ்வேளூர் வேதாரண்யம் தாலுகா மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளைய தினம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடவும் இரண்டு தாலுகா மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தாலுக்கா மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக செருதூர், காமேஸ்வரம், ஆறுகாட்டுதுரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஆயிரகணக்கான பைபர் படகுகள் கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.