திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி ஒரு இடத்தில் சரிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதை அறிந்த ரயில்வே ஊழியர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
அந்த பாலத்தின் அருகிலேயே உள்ள மற்றொரு பாலத்தின் வழியாக போக்குவரத்து நடந்து வந்தது.
கடந்த இரண்டு மாதமாக நெடுஞ்சாலை துறையினரால் பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பாலம் இன்று திறக்கப்பட்டது.
நேற்று சுமார் 30 டன் எடை கொண்ட லாரி இரவு முழுவதும் பாலத்தின் மேல் நிறுத்தப்பட்டு பாலத்தின் உறுதி தன்மை சோதிக்கப்பட்டது. ஐஐடி வல்லுநர்கள் சான்றளித்ததை தொடர்ந்து பழுது நீக்கப்பட்ட பாலம் இன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. அமைச்சர்கள் கே. என். நேரு , அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்தனர்.
கடந்த சில மாதங்களாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில் இன்று பாலம் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் திறந்து வைத்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், போலீஸ் கமிஷனர் காமினி, மாநகராட்சி கமிஷனர் சரவணன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.