கட்டிட தொழிலாளி திடீர் மாயம்
திருச்சி காஜாமலை காலனியை சேர்ந்தவர் செல்வம் (45). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி ராஜ்குமாரி அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து அவரது மனைவி செல்வத்துடன் பணியாற்றும் சக ஊழியர்களிடம் அவர் குறித்து விசாரித்தார். அப்போது அவர்கள் செல்வம் வேலைக்கு வரவில்லை என கூறியுள்ளனர். பிறகு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கே.கேநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண் திடீர் மாயம்
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி (65). இவரது மகள் ஜெயஸ்ரீ (27). இவர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். இதனால் தினமும் மேல புதூர் பகுதியில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். ஜெயஸ்ரீயை அவரது தந்தை தினமும் போட்டி தேர்வு தயாராகும் நிலையத்தில் விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று அங்கு சென்ற ஜெயஸ்ரீ மாயமானார் இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் கேட்டபோது அவர் ஏற்கனவே சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர் இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து ஜெயஸ்ரீ தேடி வருகின்றனர்.
ஆடு திருடிய 2 பேர் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.சாலையைச் சேர்ந்தவர் குணசேகரன் (28). இவர் தன் ஆடுகளை தன் வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு ஆடு மாயமானது தெரிய வந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டை திருடிய ஸ்ரீரங்கத்தைச்சேர்ந்த முருகானந்தம் (26) மற்றும் கீழவாசலைச் சேர்ந்த முருகன் (25) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தப்பி ஓடிய விக்கி என்கிற ராமச்சந்திரன் 25 என்பவரை தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆடு மீட்கப்பட்டது.

