தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் நிலை தொடர்வதால், கவர்னர் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் விசாரித்து வருகிறார். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், பல மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு திடீரென ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை கவர்னர் அனுப்பியது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண கவர்னர் ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலினை அழைத்து பேச வேண்டும் . நாங்கள் உத்தரவிடும் நிலைமையை ஏற்படுத்தி விடாதீர்கள் என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
இந்த நிலையில் கவர்னர் ரவி முதல்வர் ஸ்டாலினை மசோதாக்கள் தொடர்பாக பேச வருமாறு அழைத்து உள்ளார். இதற்கான தகவல் நேற்று மாலை முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. தற்போது முதல்வர் ஸ்டாலின் வெள்ளநிவாரண பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் பணி முடிந்ததும் வருவதாக தெரிவிக்கப்பட்டதாம். எனவே விரைவில் இந்த சந்திப்பு நடக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.