தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வைத்துள்ளார். தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்குகிறார் என்பது உள்பட பல புகார்களை கூறி கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 6-ந்தேதி ஆஜரான மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, வில்சன் ஆகியோர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட கோரும் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் விசாரணைக்காக நவம்பர் 10-ந்தேதி (இன்று) பட்டியலிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிசேக் சிங்வி, முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு மிக முக்கியமானது. வழக்கை தீபாவளிக்கு பின்னர் விசாரிக்கலாமா என கேட்டனர். இதை வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து கவர்னரின் செயலாளருக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அன்றைய தினம் மத்திய அரசின் வழக்கறிஞர்களும் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.