Skip to content
Home » மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

  • by Senthil

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் முக்கியமாக, மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 10-ந்தேதி விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாக தெரிவித்ததுடன், ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர்20-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தது.

அதன்படி இன்று  காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.  தமிழக அரசு சார்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு நவ.10ஆம் தேதி கவர்னர் தரப்பு பதிலளிக்க பிறப்பித்த பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளன? 3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கவர்னர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்றும், கவர்னர் அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய காத்திருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். மசோதாக்களுக்கு மறைமுகமாக ஒப்புதல் பெற இது போன்ற ரிட் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது எனமத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மசோதாக்கள் மீது பரிசீலனைகள் செய்ய வேண்டியுள்ளதால் அவகாசம் தேவை என்று கவர்னர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கவர்னர் , உள்துறை அமைச்சர் சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, தங்கள் தரப்பில் சிறிய  குறிப்பு தயாரித்து வைத்திருப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும்  டிசம்பர் 1ம் தேதிக்கு  ஒத்திவைத்து   தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!