Skip to content
Home » அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா

திமுக ஆட்சிக்கு வந்ததும் 2021ல் தமிழக அரசின் தலைமை  வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.   அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும்,  தனியாக வக்கீல் தொழில் செய்யப்போவதாகவும் அவர்  தெரிவித்து உள்ளார். இன்று சண்முகசுந்தரம் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து  தனது ராஜினாமா குறித்து தெரிவிக்கவும் உள்ளார்.

1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த சண்முகசுந்தரம், தன் தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ்.ராஜகோபாலிடம் கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக, மாநில அரசு, சிபிஐ, ரயில்வே சார்பாக பல வழக்குகளில் வாதாடியுள்ளார். மாநிலங்களவை திமுக எம்.பியாகவும் பணியாற்றி உள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த எம்.சி.ஜெயின் விசாரணை ஆணையம் உட்பட பல விசாரணைகளுக்கு சண்முகசுந்தரம் அரசு சார்பாக வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் அரசு தரப்பில் அவர் ஆஜராகி இருந்தார். 1996 முதல் 2001 வரையில் தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அவர் செயல்பட்டுள்ளார்.

சண்முகசுந்தரத்திற்கு பதில் புதிய  அரசு  தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!