தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ். இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீதா (43). தஞ்சையை அருகே வல்லத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 9ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கீதா தனது மகளுடன் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டார். கீதாவின் மகள் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது தாய் கீதாவுக்கு தகவல் அளித்தார்.
தொடர்ந்து கீதா வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து கீதா, தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் நகர டிஎஸ்பி ராஜா, மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.