தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண்ணுக்கும், உ.பி. மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் கடந்த 26-ந்தேதி திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் வாழ்த்துகளை கூறி விட்டு சென்று விட்டனர்.
அன்று இரவு புதுமண தம்பதிக்கு முதலிரவு. பலவித கனவுகளோடு மணமகன் முதலிரவு அறைக்கு சென்றார். அப்போது புதுப்பெண், வயிறு வலிக்கிறது என மணமகனிடம் கூறினார். இதனால் பயந்து போன மணமகன், உடனடியாக அவரை அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அதாவது திருமணம் முடிந்து இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து டாக்டர்கள் வழக்கமாக சொல்லும், குட் நியூஸ், நீங்க அப்பா ஆகப்போறீங்க, என்ற வார்த்தையை முதலிரவு அன்றே அந்த டாக்டர் சொல்லிவிட்டார். இதனால் மணமகன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். ஆம் டாக்டர் கூறியது உண்மை தான். மணமகள் 7 மாத கர்ப்பிணி. இதை பெண் வீட்டார் மறைத்து திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.
சமீபத்தில் மணமகளுக்கு வயிற்றில் கல் நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. அதனால், அவரது வயிறு பெருத்து உள்ளது என மணமகன் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறி சமாளித்து திருமணத்தை நடத்தி விட்டனர்.
இந்த நிலையில் மறுநாளே மணமகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டது. குறைபிரசவம் என்பதால் குழந்தை குறைவான எடையுடன் காணப்பட்டது. கெட்ட கனவையே வெளியே சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால் இந்த நிஜத்தை எப்படி சொல்லமுடியும். எனவே இருதரப்பினரும் ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி பெண்ணையும், அவரது குழந்தையையும் மணமகள் வீட்டார் தங்கள் வீட்டுக்கே அழைத்து சென்றுவிட்டனர். இது குறித்து யாரும் போலீசிலும் புகார் செய்யவில்லை.