Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்   காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. பனிமூட்டத்தால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டது.  சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக வழக்கமான நேர அட்டவணையைக் காட்டிலும் 15 நிமிடம் வரை தாமதமாக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது.

சென்னையில் திடீர் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.  சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க  முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது.

இது போல திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும்  பனிமூட்டம்  காணப்பட்டது.  காலை 8 மணி வரை  காவிரி ஆற்று பகுதிகளில் பனி  படர்ந்து  இருந்தது. இதனால்  காவிரி ஆற்றையே பார்க்க முடியவில்லை. வாகன  ஓட்டிகளும்   முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.

 

error: Content is protected !!