Skip to content
Home » ”ஹெல்மெட்” அணிவதை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பேரணி..

”ஹெல்மெட்” அணிவதை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பேரணி..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடியில் 34 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார் வாகன அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

34 வது சாலை பாதுகாப்பு வார விழா ஜனவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அறிவுறுத்தலின் படி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு தலை கவசம் அணிவதன் நோக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் லால்குடி உட்கோட்டத்திற்கு

உட்பட்ட லால்குடி, கல்லக்குடி, சிறுகனூர், சமயபுரம்,கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணி புரியும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆண், பெண் காவலர்கள் மற்றும் சமயபுரம், லால்குடி போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோர் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி வாகன பேரணி லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த பேரணியை லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது வாளாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி மேலவாளாடி, தாளக்குடி, நம்பர் 1 டோல்கேட், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சமயபுரம் வரை சென்றது. போக்குவரத்து ஆய்வாளர் தாமஸ் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளர் உட்பட பேரணியில் லால்குடி சரகத்திற்க்கு உட்பட்ட ஆண், பெண் என 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!