Skip to content

ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை போலீஸ் கமிஷனர், நீதிபதி சரமாரி கேள்வி

சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் வாட்ஸ்அப் குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக அளித்த புகார் மீது நொளம்பூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வானமாமலை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது,  சென்னை போலீஸ் கமிஷனர்  அருண் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா,

”மனுதாரர்,  தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு  புகார் அனுப்பியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனருக்கு ஆணையம் இ-மெயில் மூலம் உத்தரவிட்டதாக மனுதாரர் கூறுகிறார்.  ஆனால் அது போன்ற உத்தரவு எதுவும் தனக்கு வரவில்லை என  கமிஷனர்  கூறினார்.

அதற்கு நீதிபதி, அப்படி என்றால் அதுகுறித்து வருகிற 23-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். பின்னர் நீதிபதி, போலீஸ் கமிஷனரை பார்த்து கூறியதாவது:

2024-ம் ஆண்டு ஜூலை மாதம் பி.என்.எஸ். சட்டம் அமலுக்கு வந்தது. அதற்கு முன்பு இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி.,) பிரிவுகளின் கீழ் போலீசில் கொடுக்கப்புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புகார் மீது ஒன்று விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கவில்லை என்றால்,அதுகுறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், எதையும் செய்யாமல் ஆயிரக்கணக்கான வழக்குகள் தமிழ்நாடு முழுவதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்காக டி.ஜி.பி.யை நேரில் ஆஜராக சொல்லி உத்தரவு பிறப்பிக்க உள்ளேன்.

அதுமட்டுமல்ல போலீஸ் நிலையகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த எண்ணிக்கைக்கும், கோர்ட்டில் உள்ள அறிக்கைகளின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது. எனவே, சென்னை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? எத்தனை வழக்குகளில்புலன் விசாரணை நிலுவையில் உள்ளன? எத்தனை வழக்குகள் குற்றச்சாட்டு நிரூபிக்க வில்லை என்று மூடி வைக்கப்பட்டுள்ளன? என்ற விவரங்கள் குறித்து வருகிற ஜூலை 8-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

அதற்கு கமிஷனர் அருண், மாவட்ட அளவில் மாதந்தோறும் மாவட்ட நீதிபதி, போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொள்ளும் கூட்டம் நடக்கும். அ்ப்போது இதுபோன்ற விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்றார். உடனே நீதிபதி, ”மாவட்டந்தோறும் கூட்டம் நடக்கும். அதிலும் போலீஸ் சூப்பிரண்டு கலந்துக் கொள்வது இல்லை,  மாவட்ட நீதிபதி, தலைமை மாஜிஸ்திரேட்டு கலந்துக் கொள்ள வில்லை என்றால், ஐகோர்ட்டு அரைமணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க தயராக உள்ளது. அதுஒருபுறம் இருக்கட்டும். புகார்கள் மீது விசாரணை நடத்தப்படாததற்கு காரணம் புலன் விசாரணை அதிகாரியை வேறு பணிக்கு பயன்படுத்துவது தான். கோவில் கொடை விழா, அரசியல் தலைவர்கள் கூட்டம் போன்றவைக்களுக்கு பந்தோபஸ்து பணிக்கு பயன்படுத்தாதீர்கள். அதனால், அவர்களால் புலன் விசாரணை செய்ய முடியவில்லை” என்று கருத்து கூறினார்.

error: Content is protected !!