பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோரியா பஞ்சாயத்து பள்ளிக்கூடம் ஒன்றில் அனிதா குமாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். வகுப்பறையில் அவர் பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை காந்திகுமாரி வகுப்பறை ஜன்னலை மூடுமாறு கூறி உள்ளார். அதற்கு ஆசிரியை முடியாது, காற்றுக்காக திறந்து வைத்திருக்கிறேன் என்றார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
தகராறு முற்றிய நிலையில் தலைமை ஆசிரியை வெளியே சென்றார். அப்போது ஆசிரியை விடாது துரத்தி தலைமை ஆசிரியையை பிடித்து கீழே தள்ளினார். வகுப்பறையில் தொடங்கிய அடிதடி, பள்ளிக்கு வெளியே உள்ள வயல்வெளிபோன்ற மைதானம் வரை சென்றது.
அங்கு தலைமை ஆசிரியைக்கு கும்மாங்குத்து சரமாாி விழுந்தது. செருப்பாலும் தாக்கினர். அப்போது இன்னொரு ஆசிரியையும் வந்து ஒரு கம்பை எடுத்து தலைமை ஆசிரியையை சரமாரி அடித்தார்.
இரண்டு ஆசிரியைகளும் கம்பு மற்றும் காலணியால் தலைமை ஆசிரியையை அடித்தனர். குடுமியை பிடித்துக்கொண்டு தலைமை ஆசிரியையை இரண்டு ஆசிரியைகளும் சரமாரியாக தாக்கினர். இந்த காட்சிகளை அங்கிருந்த மாணவர்கள் வீடியோவில் பதிவு செய்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வட்டார கல்வி அலுவலர் சரேஷ் கூறியதாவது:- இரு ஆசிரியைகளுக்கும் இடையே தனிப்பட்ட முன்விரோதம் இருந்ததால், தாக்குதல் நடந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.