தென்மேற்கு பருவமழை கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. கர்நாடகத்தில் உள்ள கே. ஆர். எஸ். மற்றும் கபினி அணைகள் நிரம்பி விட்டதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த உபரி நீர் நேரடியாக மேட்டூர் அணைக்கு தான் வரும். கடந்த சில தினங்களாக நீர்வரத்து படிப்படியாக உயர்ந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதகால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்கு பரிசல் சவாரிக்கும், அருவியில் குளிக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது .ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை தண்ணீரில் மூழ்கிவிட்டது. பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மாலையில் இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 43,892 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21,878 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 84.222 டிஎம்சி.
இதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தால் வரும் திங்கட்கிழமை மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.