தஞ்சாவூர்: திருவையாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இயற்கை உபாதைக்காக அப்பகுதியில் உள்ள அடர்ந்த கருவேலமரம் உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த சி. திருவேதி (37) என்பவர் மதுபோதையில் அந்த 16 வயது சிறுமியை வழி மறித்துள்ளார். பின்னர் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி சட்டென்று திருவேதியை பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமியிடம், திருவேதி தவறாக நடக்க முயன்றது உண்மை என்று தெரிய வந்தது.
இதையடுத்து திருவையாறு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவேதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
