இந்தியாவில் முக்கிய அரசு பணிகளில் சேர்வதற்கான குடிமைப்பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ்) தேர்வினை ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் யுபிஎஸ்சி என்ற தேர்வு முகமை நடத்துகிறது. கடந்த மே மாதம் 28ம் தேதி ஐஏஎஸ் முதல்நிலை தேர்வினை நடத்தியது. இந்த தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால் 11 லட்சத்துக்கும் அதிகமான பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அவர்களில் 14,624 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கான மெயின் தேர்வு நாளை தொடங்குகிறது. நாளை காலை 9 மணிக்கு இந்த தேர்வு நடக்கிறது.3 மணி நேரம் தேர்வு நடைபெறும். சனிக்கிழமை(16ம் தேதி), ஞாயிற்றுக்கிழமை (17ம் தேதி) ஆகிய நாட்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் தேர்வு நடக்கும்.
அதன் பிறகு அடுத்த வாரம் 23, 24 ஆகிய தேதிகளில் காலை, மாலை இருவேளைகளிலும் தேர்வு நடைபெறும். அதாவது 9 தாள் தேர்வு எழுத வேண்டும். தமிழகத்தில் சென்னையில் மட்டும் இதற்கான தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது. டில்லி, பெங்களூரு, திருவனந்தபுரம், கொல்கத்தா உள்ளிட்ட 24 நகரங்களில் இந்த தேர்வு நடக்கிறது.
இதில் வெற்றி பெறுகிறவர்கள் பிப்ரவரி மாதத்தில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலும் வெற்றி பெறுகிறவர்களே குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களாக 2024 மே மாதம் அறிவிக்கப்படுவார்கள்.