சட்டசபையில் பேசிய பா.ம.க., – எம்.எல்.ஏ., சவுமியா பேசியதாவது:
தமிழகம் முழுதும் ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் தான், அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அப்போது, நமக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லை. இனி நீர்நிலைகளில் கட்டடம் கட்டுவதை நிறுத்த வேண்டும். தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் உருவாக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், இதுவரை ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய், கழுவேலி, சதுப்பு நிலங்களின் பட்டியலை தயாரிக்கவில்லை. முதலில் நீர்நிலைகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைத்தாலே, தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். தமிழக அரசு, கடன் வாங்கி தான், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்குகிறது. நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற, 1 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். கடன் வாங்கி இதை செயல்படுத்தினால், 10 ஆண்டுகளில் அடைத்து விடலாம்.
