சிங்கப்பூரில் வசித்து வரும் விக்னேஸ்வரன் மோகனவேல் (36) என்பவரின் பக்கத்து வீட்டில் மலாய் முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டுக் குழந்தைகள் வீட்டின் அருகே விளையாடும்போது அதிக சத்தம் எழுப்பியதாக விக்னேஸ்வரன் ஆத்திரமடைந்துள்ளார். இது குறித்துப் போலீசில் புகார் அளித்தும் ஆத்திரம் தீராத அவர், இஸ்லாமிய மதத்தில் பன்றிக்கறி தடை செய்யப்பட்டிருப்பதை அறிந்து, திட்டமிட்டு ஒரு கேன் நிறைய பன்றிக்கறியைக் கொண்டு வந்து அவர்களின் வீட்டின் முன் கொட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில் விக்னேஸ்வரனைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் ஏற்கனவே போலீசாரைத் தகாத வார்த்தைகளால் பேசிய வழக்குகளும் இருப்பது தெரியவந்தது. மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அவருக்கு 14 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் மக்கள் சகிப்புத்தன்மையுடன் வாழ வேண்டும் என அந்நாட்டு அரசு வழக்கறிஞர் இந்த வழக்கின் போது வலியுறுத்தினார்.

