Skip to content
Home » இஸ்ரோவின் அடுத்த இலக்கு சூரியன்…..

இஸ்ரோவின் அடுத்த இலக்கு சூரியன்…..

நிலவின் தென் துருவ பகுதியில் தடம் பதித்ததன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தியா, ‘சந்திரயான்3’ மூலம்  நேற்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக  தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் காலடி பதித்தது. லேண்டர் தரை இறங்கியதும் நிலவின் மேற்பரப்பில் இருந்து தூசிகள் கிளம்பின. அந்த தூசிகள் தணிந்த பிறகுதான் லேண்டரை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். பூமியில் உள்ளது போன்று நிலவில் ஏற்படும் தூசிகள் உடனே விலகாது. ஈர்ப்பு சக்தி காரணமாக சில மணி நேரங்களுக்கு பிறகுதான் மாறும். அந்த வகையில் நேற்று மாலை 6.04 மணிக்கு தரை இறங்கியதும் ஏற்பட்ட தூசி விலகுவதற்கு சுமார் 3 மணி நேரம் ஆனது. ரோவரில் உள்ள மிக நுணுக்கமான கருவிகள் தூசியால் பழுதடைந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கிய நிலையில் 3 மணி நேரம் கழித்து ரோவரை வெளியேற்றும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு லேண்டருக்குள் இருந்து சாய்வு தள பாதை மூலம் ரோவர் வெளியேறியது. 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் சாதனம் வெளியில் வந்ததும், சிறிது தூரம் தானாக இயங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் இந்தியா தனது கருவி மூலம் நடைபயணத்தை தொடங்கி விட்டது. ரோவர் சாதனம் லேசர் கதிர்களை பாய்ச்சி ஆய்வு செய்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கியது.

முதலில் செ.மீ. செ.மீட்டராக அது நகர்ந்தது. பிறகு அது தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆய்வு பணிகளை மேற்கொள்ள தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி ரோவர் சாதனம் தானாக இயங்கி மேலும் சில மீட்டருக்கு நகர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ரோவர் சாதனத்தில் 2 அதிநவீன கருவிகள் இருக்கின்றன. ஏபிஎக்ஸ் எஸ் எனப்படும் கருவியானது முதலில் செயல்பட தொடங்கியது. இந்த கருவிகள் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள ரசாயன சேர்க்கைகள் ஆய்வு செய்யப்படும். நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் எந்த அளவு உள்ளது என்பதையும் இந்த கருவி அளவிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல் தெரிவிக்கும். ரோவரில் லிப்ஸ் என்ற கருவியும் இருக்கிறது.

இது நிலவில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், லித்தியம், ஹைட்ரஜன் போன்ற கனிமங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கும்.

ஹைட்ரஜன் தயாரிக்கவும், நிலவில் ஆக்சிஜன் உருவாக்கவும், நிலவில் சுரங்கப் பணிகள், செவ்வாய் கிரகத்திற்கான பயணம் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தென் துருவ ஆய்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கிடையே வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டுள்ள லேண்டர் சாதனமும் தன்னிச்சையாக சில ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்காக லேண்டரில் 5 நவீன கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. ரம்பா, சேஸ்ட், இல்சா எனப்படும் அந்த கருவிகள் நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாறுபாடுகள் பற்றி ஆய்வு செய்யும்.

நிலவில் உள்ள மேடு, பள்ளங்களை லேண்டர் கண்காணித்து படம் பிடித்து தகவல்கள் தரும். அதுமட்டுமின்றி நிலவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் லேண்டரில் உள்ள கருவிகள் மதிப்பீடு செய்யும். மேலும் நிலவில் விரிசல்கள் இருந்தால் அவை எப்படி ஏற்பட்டன. அவற்றுக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதையும் லேண்டர் சாதனத்தில் உள்ள கருவிகள் ஆய்வு செய்து தகவல்களை தரும். மொத்தத்தில் உலக விண்வெளி ஆய்வில் பல புதிய தகவல்களை லேண்டரும், ரோவரும்  விஞ்ஞான உலகுக்கு  கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2 சாதனங்களும் அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து ஆய்வுகளை செய்யும். ஆயிரக்கணக்கான புகைப்படங்களுடன் தகவல்களையும் இந்த சாதனங்கள் வழங்க உள்ளன. 14 நாட்களுக்கு பிறகு இந்த இரு சாதனங்களும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆர்பிட்டரும், சந்திரயான்-3 உந்துவிசை கலனும் தொடர்ந்து மேலும் சில ஆண்டுகளுக்கு சந்திரனை சுற்றி வரும். அடுத்ததாக  இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-4 திட்டத்தை கையில் எடுக்க உள்ளனர்.

அடுத்ததாக இஸ்ரோ சூாியனுக்கு  விண்கலத்தை அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளது.

பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சூரியன். சூரிய ஒளி பூமியை வந்தடைய 8நிமிடங்கள் ஆகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கும் சக்தி தரக்கூடிய மிகப் பெரிய ஆற்றல் கொண்டது சூரியன். சூரியனின் ஆற்றல் இல்லாமல் பூமியில் உயிர்கள் வாழ்வது கடினம்.

சூரியனின் துருவப் பகுதிகள் இதுவரை நன்கு ஆய்வு செய்யப்படவில்லை. எனினும், எதிர்காலத்தில் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் ஒன்றிணைந்து சூரியனை முழுமையாக ஆய்வு செய்ய முன் வரலாம். அதற்கு ஒரு தொடக்க புள்ளியாக இஸ்ரோவின் இந்த திட்டம் நிச்சயமாக உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!