பொங்கல் விழாவின் சிறப்புகளில் முக்கியமானது ஜல்லிக்கட்டு, தை முதல் நாளில், மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக ஜல்லிக்கட்டு திடலுக்கு கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன் மற்றும் அதிகாரிகள் வந்திருந்து ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி அங்கு வந்தார். அப்போது ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதி மொழி எடுத்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். போட்டியில் பங்கேற்க மொத்தம் 1,000 காளைகள், 800 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 பிரிவுகளாக வீரர்கள் களம் இறக்கப்படுகிறார்கள். முதலில் மஞ்சள் டீ சர்ட் அணிந்த 50 வீரர்கள் இறக்கப்பட்டனர். இதில் முத்துகிருஷ்ணன் என்ற வீரர் 6 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அதைத்தொடா்ந்து அவர் 2ம் சுற்றிலும் அனுமதிக்கப்பட்டார். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பாத்திரங்கள், கட்டில், பீரோ , மின்விசிறி, சைக்கிள் என பரிசுகள் வழங்கப்பட்டது. அடக்கப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சார்பில் தங்க காசு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியை காண பல்லாயிரகணக்கான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் காளைகள் சீறிப்பாய்வதை பார்த்து மெய்சிலிர்த்தனர். சீறி வந்த காளைகளையும், வீரர்கள் அடக்கி அசத்தினர். 2வது சுற்றில் பச்சை, இளம் பச்சை டீ சர்ட் அணிந்த வீரர்கள் இறங்கினர். 9 மணி அளவில் 2ம் சுற்று நிறைவடைந்தது. 2 வது சுற்றிலும் முத்துகிருஷ்ணனே முதலிடம் பிடித்தார். இவர் இரண்டாம் சுற்றில் மட்டும் 7 காளைகளை அடக்கினார். முதல் சுற்றில் 6 காளைகளை அடக்கினாா். இவர் தேனி மாவட்டம் சீலையம்பட்டியை சேர்ந்தவர். 2வது சுற்றில் ரஞ்சித், காா்த்தி ஆகிய 2 வீரர்கள் தலா 6 காளைகளை அடக்கினர். 3வது சுற்றில் ஆரஞ்ச் டீ சர்ட் அணிந்த 50 வீரர்கள் இறங்கினர். திருச்சி பாலக்கரை சூரியா காளையும் களத்தில் இறங்கி அசத்தியது.மாலை 4 மணி வரை ேபாட்டிகள் நடைபெறும். இறுதிவரை அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்படுகிறது.
போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.