தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் இன்று 5 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டு போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்ததுடன், ஜல்லிக்கட்டை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பு குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி டில்லியில் கூறியதாவது:
ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் தமிழக அரசு சிறப்பாக இந்த வழக்கை நடத்தியது. தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி இது. சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு தமிழக அரசு வாதாடியது. இது சிறப்பான தீர்ப்புதமிழகத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான அவசர சட்டம் இயற்றபட்டபோது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். அவர் இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, இது தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி என்றார்.