மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. இதில் கட்சித்தலைவர் கமல்ஹாசன் பேசினார். அவர் பேசியதாவது:
நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை. சோகத்தில் அரசியலுக்கு வந்தவன். முழு நேர அரசயில்வாதி என்று யாரும் இல்லை. 90 ஆயிரம் பேர் ஓட்டு போடாததால் நான் கோவையில் தோற்றேன். என்னை அரசியலுக்கு வரவைப்பது கடினம் என்றார்கள். அரசியலில் இருந்து என்னை வெளியேற்றுவது அதைவிட கடினம். எனது அரசியல் பயணம் தொடங்கி விட்டது. அழுத்தமாக நடைபோடுவேன். முழு நேர அரசியல்வாதி என சொல்பவர்கள் வியாபாரிகள். தேசத்தில் முழுநேர குடிமகன்கள் கூட யாரும் இல்லை. முழு நேர அப்பனும் இல்லை, முழு நேர பிள்ளையும் இல்லை.
படையெடுத்து வரும் எதிரி படைகளுக்கு என்ன வரவேற்பு அளிக்கப்படுமோ அந்த வரவேற்பு டில்லியில் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. எதிரியைப்போல விவசாயிகள் நடத்தப்படுகிறார்கள். டில்லியில் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க ஆணிப்படுக்கை போட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்த நன்மையில் 10% கூட மத்திய அரசு செய்யவில்லை.
தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என நினைப்பவர்கள் மத்தியில் இருக்க்கி்றார்கள். நாடு முழுவதும் மாநிலங்களுக்கு சமமான நிதிப்பகிர்வு அளிக்க வேண்டும். நாம் அளிக்கும் 1 ரூபாயில் 29 பைசா தான் திரும்பி வருகிறது.
தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும். அரசி்யலுக்கு வருவது அவரவர் விருப்பம். விஜய்யை அரசியலுக்கு முதன் முதலில் அழைத்தது நான் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.