இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இலவச பன்முக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வாஞ்சூர் தனியார் கப்பல் துறைமுகத்தில் நடைபெற்ற பன்முக மருத்துவ முகாமினை, தமிழ்நாடு,புதுச்சேரி பிராந்திய கடற்படை அட்மிரல் கமாண்டர்,ரவிக்குமார் திங்ரா துவக்கி வைத்தார். இன்று துவங்கிய பன்முக மருத்துவ முகாமில்,நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது உடல்நிலை பரிசோதனைக்காக வருகை தந்தனர்.
பின்னர் அங்கு காது மூக்கு கண் உள்ளிட்ட உடல்நலம் பாதிப்பு உள்ளான நோயாளிகளுக்கு, ராணுவ சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகள்
வழங்கப்பட்டன. கடற்படை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பன்முக மருத்துவ முகாமில் பங்கேற்க வந்த மீனவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படையின் கப்பலையும் இன்று சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அங்கிருந்த கடற்படை கப்பலின் பணிகள் மற்றும் அதில் நாட்டின் பாதுகாப்பிற்காக பணியாற்றும் வீரர்களின் செயல்பாடுகள் குறித்து கடற்படை வீரர்கள் மக்களிடம் எடுத்துக்கூறினர்.