கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடம் மாவட்டம் மூடுபிரியில் உள்ள ஆழ்வா இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை பாரத சாரண சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாச்சார பெருந்திரளணி விழா நடக்கிறது . இதில் பங்கேற்க மாவட்ட அளவில் தஞ்சை மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பளியை சேர்ந்த சாரணிய மாணவிகள் 9 பேர் தேர்வாகி பங்கு கொள்கின்றனர்.
மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மாணவிகள். மாவட்ட அளவிலான பல்வேறு கலை விழாக்களில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்திவருகின்றனர். இவர்கள் சாரண அமைப்பிலும் தங்கள் திறமைகளை காண்பித்து வெற்றிகளை குவித்து வருகின்றனர்.
தஞ்சை கல்வி மாவட்டத்தின் சார்பில் மனோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த சாரணிய மாணவிகள் பத்தாம் வகுப்பை சேர்ந்த வைஷ்ணவி, ராகவி, லோகேஸ்வரி, 9ம் வகுப்பை சேர்ந்த ஜெயஸ்ரீ, யுவஸ்ரீ, எழிலரசி, ஹர்ஷினிசரோ, நேத்ரா, சுஜா ஆகிய 9 பேர் கலந்து கொள்கிறார்கள்.
விழாவில் இம்மாணவிகள் கோலாட்டம் மற்றும் கும்மியாட்டம் ஆகியவற்றில் பங்கு கொள்கிறார்கள். இந்த மாணவிகளுக்கு இப்பள்ளி முன்னாள் மாணவி சண்முகி நடனப் பயிற்சி அளித்து வருகிறார்.
சாரணிய ஆசிரியை இந்துமதி தலைமையில் கர்நாடகாவிற்கு செல்கின்றனர். இவர்களுடன் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை உயர்நிலைப்பள்ளி சாரண ஆசிரியர் சிராஜுதீனும் செல்கிறார். இவர்களை சாரண இயக்க மாவட்ட செயலாளரும், பள்ளி தலைமை ஆசிரியருமான சந்திரமௌலி ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிறார்.
தமிழ்நாடு பாரத சாரண, சாரணிய இயக்க தஞ்சாவூர் மாவட்ட முதன்மை ஆணையர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருமான சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலரும், மாவட்ட சாரண ஆணையருமான கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். தஞ்சை மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் இப்பள்ளி மாணவிகள் மட்டும் தேர்வு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.