முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது கலைஞர் சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்பட பலரும் கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதலமைச்சர் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். வீட்டின் உள்ளே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
பின்னர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்ற முதல்வர் அங்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடக்கும் செம்மொழி விழாவில் கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
