முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தை இருமுறை வழங்கிய முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதிக்கு மாியாதை செலுத்தினர். பின்னர் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து அரியலூர் மாவட்ட திமுக சார்பில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறவழிச் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்திற்கு அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பேரணியாக வந்தனர்.
அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி திருவுருவச் சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அங்கு பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மாவட்டம் முழுவதும் உள்ள திமுக அமைப்பு ரீதியிலான 18 ஒன்றியங்களிலும் திமுகவினர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியும், மாவட்டம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

