Skip to content
Home » ஜூன்3ல் திருவாரூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா மாநாடு… கலைஞர் கோட்டம் திறப்பு

ஜூன்3ல் திருவாரூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா மாநாடு… கலைஞர் கோட்டம் திறப்பு

  • by Senthil

சென்னை அண்ணா அறிவாலயம்  கலைஞர் அரங்கில், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்  துரைமுருகன், முதன்மை செயலாளர் கே. என். நேரு மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்,  தலைமை கழக நிர்வாகிகள், எம்.பிக்கள் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு:

உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் – பல்லாயிரம் ஆண்டுப் பழந்தமிழின் முத்தமிழ் அறிஞர் – இந்திய நிலப்பரப்பில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த சிற்பி – பல முறை இந்திய பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர் – 95 ஆண்டு கால வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்த ஓய்வறியா போராளி – போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற சாதனை நாயகர் – தாய்த்தமிழ் நாட்டினை 19 ஆண்டுகள் ஆட்சி செய்த

 

  

தலைசிறந்த நிர்வாகி – அரைநூற்றாண்டு காலத் திரையுலகத்தின் திசையைத் தீர்மானித்த வசன கர்த்தா – எழுஞாயிறு எழும் நாளெல்லாம் எழுதித் தீட்டி இலக்கியமாய் இயங்கிய எழுத்து இலக்கணம் – இன்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வரும் ஜூன் 3ம் நாள் நூற்றாண்டு விழா தொடங்குகிறது.

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டு காலம் கட்டி காத்த நம் கழகத்தை மேலும் வலிமைபடுத்த, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க “உடன்பிறப்புகளாய் இணைவோம்” என்ற மாபெரும் முன்னெடுப்பு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3ம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023 தலைவர் கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது.

துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு தோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களைச் கழகத்தில் இணைத்திடுவோம்.

தமிழின தலைவர் கலைஞர் அவர்களை தாய் தமிழ்நாட்டிற்கு தந்த திருவாரூரில் வரும் ஜூன்3ல்   தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு நடைபெற இருக்கிறது.

தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு “கலைஞர் கோட்டம்” வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை- கட்டிடங்கள் என்று சொல்வதை விட அன்னை தமிழ்நாட்டிற்கும்- இந்திய திருநாட்டிற்கும் தலைவர் கலைஞர் ஆற்றிய பங்களிப்பின் பசுமையான நினைவுச் சின்னங்களாக “கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை” அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள்.

தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். வரும் ஜூன் 3ல்  தொடங்கி அடுத்த ஆண்டுஜூன்- 3 வரை ஓராண்டு காலம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக – மக்கள் விழாவாக – கொள்கை விழாவாக – வெற்றி விழாவாக- இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழ் மொழிக் காப்பு – தமிழின உரிமைகள் – தமிழ்நாட்டின் உயர்வு – திராவிடச் சுயமரியாதை – மாநில சுயாட்சி – சகோதரத்துவம் – மதச்சார்பின்மை – சாதி ஒழிப்பு – ஒடுக்கப்பட்டோர் நலன் – சமூக நீதி-பெண்ணுரிமை – இலக்கிய வளர்ச்சி – கலைத்துறை மேம்பாடு எனப் பலமுனைப் பங்களிப்புகளை தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றி இருக்கிறார்கள். எந்த நோக்கத்துக்காக தனது வாழ்க்கையையே தலைவர் கலைஞர் அவர்கள் ஒப்படைத்துக் கொண்டார்களோ அந்த நோக்கத்துக்காக தலைவர் கலைஞர் அவர்களின் வழித்தடத்தடத்தில் அயராது பணியாற்ற இக்கூட்டம் உறுதி ஏற்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!