நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது உறவினர் ஒருவருடன் தனக்கு சொந்தமான காரில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வையாபுரி நகர் நான்காவது குறுக்குத் தெருவில் வணிக வளாக கட்டிடம் ஒன்றின் மாடியில் ஜாதகம் பார்ப்பதற்காக வந்துள்ளார். அங்குள்ள ஜோசியர் வெளியே சென்ற காரணத்தால், சுமார் ஒரு மணி நேரம் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரின் முன் பக்கம் அமைந்துள்ள எஞ்சின் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதனை கண்ட அப்பகுதியினர், கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரமாக போராடி தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் காரின் எஞ்சின் பகுதி
எரிந்து கருகியது. விபத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, காரின் உரிமையாளர் முகப்பு விளக்குகள் மற்றும் பார்க்கிங் விளக்குகளை அணைக்காமல் சென்றிருக்கலாம் எனவும், அதனால் கோடைகாலம் என்பதால் எஞ்சின் சூடேறி, தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்தை அப்பகுதி பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.