Skip to content

கரூர்-ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு கௌரவிப்பு

கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளை சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு.

37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கரூரில் மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிவந்த வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவல்துறையினர் சால்வை

அணிவித்து, இனிப்புகள் வழங்கி பாராட்டினர். இதன் மூலம் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றும் பழக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிவந்த நபர்களுக்கு, ஹெல்மெட் அணிவது கட்டாயம்

என்பதை வலியுறுத்தும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி கரூர் மாநகர் போக்குவரத்து ஆய்வாளர் சசிரா பானு தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் வெங்கடாசலம் கலந்து கொண்டு

சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளை குறைக்க, சாலை பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளில், கரூர் மாவட்டம் மாநில அளவில் மூன்றாவது இடத்தில் இருப்பது கவலைக்குரிய விஷயமாக தெரிவிக்கப்பட்டது.

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது, குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

error: Content is protected !!