Skip to content
Home » கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல் அமைச்சரும் , எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருகிறார்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு, இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, அதனை அறிக்கையாக ஜனவரி 12ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!