கோவை, மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரிடம் இன்று காலை கோவை அனைத்து இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் தந்தை பெரியார் திராவிட கழக மாநில பொதுச் செயலாளர் கு ராமகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை ஆதீனம் சென்ற வாகனம் உளுந்தூர்பேட்டை சாலை அருகே விபத்தில் சிக்கியது தொடர்பாக, 2 நாட்கள் கழித்து பிறகு அவர் தனது கார் டிரைவர் மீது இருந்த தவறை மறைத்து அந்த விபத்து தீவிரவாத தாக்குதல் என்று கூறியிருந்தார்.
நடைபெறாத ஒன்றை நடைபெற்றதாக கூறி இரு வேறு மதங்களுக்கு இடையே கலவரம் உண்டாக்கக் கூடிய நோக்கத்துடன் அவர் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அனைத்து மக்களும் பேதமின்றி சகோதரத்துவத்துடன் வாழும் தமிழ்நாட்டில் மத கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இரு வேறு பிரிவினருக்கு இடையே வன்மத்தை தூண்டக் கூடிய வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனதில் கூறியிருந்தனர்.
தொடர்ந்து நிருபர்களிடம் கூறிய அவர்கள் மதுரை ஆதீனத்தின் மீதுமதக் கலவரத்தை தூண்டுதல், பிரிவு 113 ஆ பிரிவின் கீழ் ஒற்றுமையை சீர்குலைத்தல், பிரிவு 192 இன் கீழ் தவறான தகவல் பரப்புதல் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கூறினர்.
அப்போது தமிழ்நாடு திராவிடர் சுய மரியாதை கழக தலைவர் நேரு, வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு இயக்கம் காமராஜ், சி.பி.ஐ எம் எல்., நாராயணன், இந்திய ஒற்றுமை இயக்கம் கதிரவன், திராவிட தமிழர் கட்சி வெண்மணி, மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்கள் அதிகாரம் விடுதலை சிறுத்தை கட்சி குரு உள்ளிட்ட அமைப்பு நிர்வாகிகள் உடனிருந்தனர்.