திருச்சி, கருமண்டபத்தில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 77-ம் ஆண்டு வைகாசி திருவிழா மற்றும் 35-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்க நாளில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், கோரையாற்றில் இருந்து அம்மனுக்கு பூ கொண்டு வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான குத்துவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவின் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் கோரையாற்றில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்தபடியும், அலகு குத்தியபடியும் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். பின்னர் கோவிலில் தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி காலையில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், இரவு ஒண்டிகருப்பு சாமிக்கு காவுபூஜையும், இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.
