திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் , கடந்த 2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். அவர் வணிகவியல் துறையில் பயிலும் மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது அறைக்கு மாணவிகளை வரச் சொல்லி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை சக மாணவிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தபோது
கடந்த 24ம் தேதி அதை வகுப்பில் பயிலும் சக மாணவர்களிடம் மாணவிகள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர் வினோத்குமாரிடம் கேட்டபோது உங்கள் வேலையை பாருங்கள் என்று அவர் பதிலளித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பேராசிரியர் வினோத்குமாரை கல்லூரியில் புரட்டி எடுத்தனர். கல்லூரியின் ஆய்வகம், கணினி பொருட்களையும் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து அறிந்த லால்குடி சரக காவல்துறை கண்காணிப்பாளர் அஜய்தங்கம், கோட்டாட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் தகவல் அறிந்து கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர்.அப்போது 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் , பேராசிரியரை கைது செய்யவேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டனர்
இதனை தொடர்ந்து பேராசிரியர் வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் பேராசிரியர் வினோத் குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் தலையை மூடிக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பேராசிரியர் வினோத் குமாரை தாக்கிய மாணவர்கள் 16 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கௌரவ விரிவுரையாளர் வினோத் குமாரை மாணவர்கள் தாக்கும் பொழுது கணினி மையத்தில் இருந்த பொருட்கள் கணினிகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சேதமான பொருட்களின் மதிப்பு ரூ 1.50 லட்சம் ரூபாய் எனவும், இந்த செலவுகளை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 16 மாணவர்களும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே மீண்டும் கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவர் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தன்னுடன் பயிலும் சக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பிரச்சனைக்கு நீதி கேட்க சென்ற மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 16 மாணவர்கள் பெயர் விவரம் வருமாறு:
1.ராஜேஷ் கண்ணன்
2. மாதேஸ்வரன்
3.முகேஷ் குமார்
4.ஹரிஷ்
5.பிரசாந்த்
6.மோகன்ராஜ்
7.தேவ விஷால்
8.கிருஷ்ணகுமார்
9.ஜெரின் ஜோயல்
10.ஆல்வின்
11.தினேஷ் குமார்
12.தனுஷ் குமார்
13.ஹரிஷ்
14.ஆல்பர்ட்
15.பரமேஸ்வரன்
16.கவியரசன்
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறும்போது, இந்த சம்பவத்துக்கு காரணமான பேராசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரிடம் தான் இந்த தொகையை வசூலிக்க வேண்டும். இந்த கலவரத்துக்கு காரணம் பேராசிரியர்தான். அவரிடம் வசூலிக்க வேண்டும். இதை அனுமதித்த முதல்வரிடம் வசூலிக்க வேண்டும். பேராசிரியரின் பாலியல் தொல்லை குறித்து கண்டும் காணாமல் இருந்த கல்லூரி முதல்வரையும் பணியிடை நீக்கம் செய்து அவர்கள் இருவரிடம் இருந்தும் இந்த நஷ்ட ஈட்டை பெறவேண்டும். இல்லாவிட்டால் கல்லூரி முன் பெற்றோர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து உள்ளனர்.