Skip to content

சிக்கலில் மதுரை ஆதினம்..! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றப்பொது மதுரை ஆதினம் கார் மீது மற்றொரு கார் மோதியது.

இந்த விபத்தில் மதுரை ஆதீனம் எந்தவித காயமுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்பு விபத்துக்குள்ளான காரிலேயே அவர் சென்னை சென்றார். தன்னை கொலை செய்ய சதி என மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார். மேலும் குறிப்பிட்ட மதத்தினர் மீது மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இது தற்செயலாக நிகழ்ந்த விபத்து என்பதும் மதுரை ஆதீனத்தை கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலிங்கம் சென்னை மாநகர ஆணையருக்கு, ”தன்னை கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதினம் பொய் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

இதன்மூலம் இரு மதத்தவர்கள் இடையே வெறுப்புணர்வு, பகை உணர்வை தூண்டுகிறார். இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். மதநல்லிணக்கத்தை சீர்க்குலைக்கும். இதனால் பொய்களை கூறிய மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனு அனுப்பி இருந்தார். மேலும் திமுக கூட்டணி கட்சிகளும் தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் மோதல்களை தூண்ட அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்து இருந்தன.

இந்நிலையில், வழக்கறிஞர் ராஜலிங்கத்தின் புகாரின் அடிப்படையில் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், இருபிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை ஆதினத்துக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!