பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் மாதம் 15 ம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர். இதனால் தமிழக மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன், நிராகரிக்கப்பட்ட 56.50 லட்சம் பேருக்கு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து இன்று முதல் அவர்களின் செல்போன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.