காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு வந்திருந்த 15 வயது பள்ளி மாணவி கடந்த 13-ஆம் தேதி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உத்திரமேரூர் போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் மாணவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அதில், சேந்தாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகோடி மகன் ஜீவானந்தம் (45) என்பவருடன் மாணவிக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தலைமறைவாக இருந்த ஜீவானந்தத்தை போலீசார் பிடித்து, அவரிடமிருந்த மாணவியை மீட்டனர். விசாரணையில், ஜீவானந்தத்திற்கு ஏற்கனவே தேவி, சுமித்ரா ஆகிய இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், 11-ஆம் வகுப்பு படிக்கும் இம்மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியதும், தற்போது மாணவி கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. திருவிழாவிலிருந்து மாணவியைக் கடத்திச் சென்று, கோவிலில் தாலி கட்டி குடும்பம் நடத்திய ஜீவானந்தத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
