திருச்செந்தூர் ஜீவா நகரில் உள்ள மீன் வலை பின்னும் கூடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தன.
திருச்செந்தூர் ஜீவா நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் 25 ஃபைபர் படகுகள் மூலம் கடல் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு அங்குள்ள மீன் வலை பின்னும் கூடத்தில் திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தீ வேகமாகப் பரவுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடித் தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். இருப்பினும், கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாகின.
சமூக விரோதிகள் மீது மீனவர்கள் குற்றம்சாட்டு:
இரவு நேரத்தில் அப்பகுதியில் சமூக விரோதிகள் அடிக்கடி மது அருந்தி விட்டு அராஜகத்தில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்தத் தீ விபத்திற்குப் பின்னணியில் சமூக விரோதிகளின் சதிச்செயல் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
