மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர்
காவல் நிலையம் ஏற்கனவே இயங்கி வந்த பழைய கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து அதனை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையம் கடந்த 4 வருடங்களாக காவலர் குடியிருப்பு வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது. இதை தொடர்ந்து ஏற்கனவே இருந்த காவல் நிலையம் அருகிலேயே 3077 சதுர அடி பரப்பளவில் புதியதாக காவல் நிலையம் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை
சென்னையில் இருந்து டிஜிபி சைலேந்திரபாபு காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா குத்துவிளக்கு ஏற்றி பெரம்பூர் புதிய காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், மாவட்ட குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஏ.டி.எஸ்.பி வேணுகோபால், டி.எஸ்.பிக்கள் கலைக்கதிரவன், சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.