Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீனாட்சி திருக்கல்யாணம்; ஏப்.19 முதல் 22 வரை முன்பதிவு செய்யலாம்

மதுரை: ஏப்.28ஆம் தேதி நடைபெறும் மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தைக் காண ஏப்.19 முதல் 22 வரை கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் புகழ் பெற்ற சித்திரைப் பெருவிழா வருகின்ற ஏப்.18-ஆம் தேதி முதல் ஏப்.30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேற்படி பெருவிழாவில் முக்கிய உற்சவமான திருக்கல்யாண உற்சவம் ஏப்.28-ஆம் தேதி இத்திருக்கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது.அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200/- மற்றும் ரூ.500/-க்கான கட்டணச்சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First Serve) என்ற அடிப்படையில் பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in-லும் மற்றும் இத்திருக்கோயிலின் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in- லும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 22-ம் தேதி இரவு 9.00 மணி முடிய ரூ.500/- மற்றும் ரூ.200/- கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ரூ.500/- மதிப்பிலான கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் இரண்டு கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.ரூ.200/- மதிப்பிலான கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் மூன்று கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ஒரே நபர் ரூ.500/- மற்றும் ரூ.200/- கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது. பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும். எனவே ஒரு கைபேசி எண்ணில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்ய இயலாது. பாதுகாப்பு காரணங்கள் கருதி குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும், பக்தர்களின் வசதி மற்றும் விருப்பத்திற்கிணங்க, இத்திருக்கோயிலுக்கு சொந்தமான எல்லீஸ்நகரில் அமைந்துள்ள யாத்ரிநிவாஸ் தங்கும் விடுதியில் மேற்படி நாட்களில் காலை 10.00 மணிமுதல் மாலை 06.00 மணி முடிய நேரடியாக திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு ரூ.500/- மற்றும் ரூ.200/- கட்டணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணச் சீட்டு முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் தேசிய அடையாள அட்டையை (Aadhaar Card) ஆளறிச்சான்றாக (Photo ID proof) கொண்டு, தங்களது கைபேசி எண்ணுடன் (Mobile No.), மின் அஞ்சல் முகவரி இருப்பின் (E-Mail ID) அதன் விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.அனுமதிக்கப்பட்ட கட்டணச்சீட்டுகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் கணினி மூலம் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் (confirmed message) விண்ணப்பித்த பக்தர்களுக்கு அவர்களால் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் / கைபேசி எண்ணிற்கும் ஏப்.23-ம் தேதி அனுப்பப்படும். இவ்வாறு உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் / குறுந்தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் ஏப்.24ம் தேதி முதல் ஏப்.27 ம் தேதி வரையுள்ள நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி முடிய மதுரை, எல்லீஸ் நகரில் அமைந்துள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு திருக்கல்யாண நுழைவு கட்டணச்சீட்டு விற்பனை மையத்தில் உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் / குறுந்தகவலைக் காட்டி,கட்டணச் சீட்டிற்கான தொகையினை ரொக்கமாக செலுத்தி கட்டணச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின்பு வருபவர்களுக்கு கட்டணச் சீட்டு வழங்க இயலாது. திருக்கல்யாணம் ஏப்.28ம் தேதி அன்று காலை 08.35 மணிக்கு மேல் 08.59 மணிக்குள் நடைபெறும் என்பதால், ரூ.500/- மற்றும் ரூ.200/- திருக்கல்யாண நுழைவுக் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை மட்டுமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ரூ.500/- மதிப்பிலான கட்டணச்சீட்டு பெற்றவர்கள் திருக்கோயில் வடக்கு இராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவார்கள்.ரூ.200/- மதிப்பிலான கட்டணச்சீட்டு பெற்றவர்கள் திருக்கோயில் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள அமைக்கப்பட்ட பாதை வழியாக வந்து வடக்கு இராஜகோபுரம் வழியாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெற்றவர்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட இடங்களில் காலை 07.00 மணிக்குள் அமர்ந்து அமைதியான முறையில் திருக்கல்யாண காட்சியைக் கண்டு மீனாட்சி சுந்தரேசுவரர் அருள் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!