Skip to content
Home » மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்…ஆம்புலன்ஸ் ஊழியர் கைது

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்…ஆம்புலன்ஸ் ஊழியர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை நேற்று முன்தினம் இரவு வயிற்றுவலி காரணமாக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அவரது தாயார் அழைத்து சென்றார்.  அந்த பெண் ஏற்கனவே மனநல பாதிப்புக்கான சிகிச்சையும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த ஆம்புலன்சில் முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 38) டெக்னீசியனாக இருந்தார். அவர் இந்த பெண்ணை ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த நர்ஸ் வேறு ஒரு நோயாளியை கவனிக்க சென்றதால் சற்று காத்திருக்குமாறு கூறியுள்ளார். அந்த சமயத்தில் தனக்கு தெரிந்த டாக்டரிடம் கூறி உடனே சிகிச்சை அளிப்பதாக கூறிய பாலமுருகன், பெண்ணின் தாயாரை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு, இளம்பெண்ணை மட்டும் தனியாக அழைத்து சென்றாராம். பின்னர் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று அங்கு அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது தாயிடம் கூறி கதறி அழுதார். இதை தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராமநாதபுரம் பி.1 நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். இதற்கிடையே பாலமுருகனை பணியில் இருந்து நீக்கி 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!