உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு இந்த ஆண்டு தரவில்லை. ஜூன், ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் தரவேண்டிய தண்ணீரில் சுமார் 30 டிஎம்சி இன்னும் தராமல் நிலுவையில் உள்ளது. இதனால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவைப்பயிர் தண்ணீர் இன்றி கருகத்தொடங்கியது.
இந்த நிலையில் தமிழக அரசு, காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 14 ஆயிரத்து 136 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. அதன்படி மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. தற்போது 13ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அறிவிப்பு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.