ஈரானைச் சேர்ந்த ‘செபெஹ்ரான் ஏர்லைன்ஸ்’ (Sepehran Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 Passenger Aircraft, மஷாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கெர்மான்ஷா (Kermanshah) நகருக்குப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் பெரும் விபத்தைச் சந்தித்தது.
விமானம் ஓடுபாதையை விட்டு எழும்பிய சில நொடிகளிலேயே, அதன் லேண்டிங் கியர் டயரின் மேற்பகுதி வெடித்து சிதறியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தின் எஞ்சினும் சேதமடைந்தது. உடனடியாக நிலமையை உணர்ந்த விமானி, விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து, மீண்டும் மஷாத் விமான நிலையத்திலேயே விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரினார்
விமானத்தின் எஞ்சின் பழுதடைந்ததைத் தொடர்ந்து, விமானம் நடுவானில் மிகக் கடுமையாகக் குலுங்கியது (Violent Vibrations). இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் பெரும் பீதியடைந்து அலறத் தொடங்கினர்.
விமானம் பயங்கரமாகக் குலுங்கியதில், அதன் மேற்கூரை அமைப்புகள் (Ceiling Panels) பெயர்ந்து பயணிகள் மீது விழுந்தன.பயணிகள் தங்களின் இருக்கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு பிரார்த்தனை செய்வதையும், பொருட்களும் கைப்பேசிகளும் கீழே சிதறி விழுவதையும் காண முடிகிறது.
விமானியின் திறமையான நடவடிக்கையால் போயிங் 737 விமானம் மஷாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் எவ்விதக் காயமுமின்றிப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் மாற்று விமானம் மூலம் கெர்மான்ஷாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (Civil Aviation Organisation of Iran) தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. டயர் சேதத்திற்கும் எஞ்சின் கோளாறுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
