புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 7ம் தேதி அனுமதியளித்தது. அன்றைய தினம் இரவே புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 12-ம் தேதியான இன்றுடன் செந்தில் பாலாஜியின் காவல் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். மேலும் 5 நாட்கள் நடத்திய விசாரணை குறித்த குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும் 5 நாட்கள் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறையினரின் மனுவினை தள்ளுபடி செய்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி அடுத்த வாரம் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..