அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதில் நீதிபதி நிஷா பானு அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். ஆனால் நீதிபதி பரதசக்கரவர்த்தி, கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர், நீதிபதி பரதசக்கரவர்த்தி உத்தரவை சரி என்று தீர்ப்பு அளித்தார்.
மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் எத்தனை நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம்? என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தன் தீர்ப்பில் கூறியிருந்தார். இதன்படி இந்த ஆட்கொணர்வு வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி நிஷா பானு கூறியதாவது:
ஏற்கனவே தான் அளித்த தீர்ப்பில் உறுதியாக இருக்கிறேன். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் காலத்தில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற காலத்திற்கு விலக்களித்தால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் சொல்வதற்கு ஏதுமில்லை.
அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா: அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ: உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து அம்சங்களையும் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்போது இந்த மனுவை ஏன் நிலுவையில் வைக்க வேண்டும். எனவேஇந்த மனுவிலும் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கட்டும். என்று கூறிய நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை ஐகோர்ட் முடித்து வைப்பதாக அறிவித்தனர்.